Mon. Jun 30th, 2025

பிச்சைக்காரனின் உயர்வு

மயிலாடுதுறை இலக்கியா அவர்களின் சிறுகதை

ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய கதை புத்தகங்களை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

கண்ணன் என்ற ஒரு நபர் அந்த வழியாக சென்றபோது பத்து ரூபாயை பிச்சைக்காரனின் திருவோட்டில் போட்டார்.

பிறகு புகைவண்டியில் ஏறி தனது இருக்கைக்கு சென்று அமர்ந்தார்.

அவரது மனதில் ஒரு கருத்து உதித்தது அவன் பிச்சைக்காரன் தான் ஆனால் அவனது கையில் புத்தகங்கள் உள்ளதே என்று எண்ணிக் கொண்டே அந்த பிச்சைக்காரனை விரைந்து நோக்கி சென்றார்.

அவனது கையில் இருந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டு பத்து ரூபாய்க்குச் சமமான புத்தகத்தை எடுத்துக் கொள்கிறேன், என்ன இருந்தாலும் நீயும் தொழில் செய்கிறாய் அல்லவா? என்று கூறிவிட்டு தனது இருக்கைக்கு சென்றார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு கண்ணன் தனது குழந்தையின் பள்ளி விழாவிற்குச் சென்றிருந்தார்.

அப்போது அப்பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக அந்த புகை வண்டியின் பிச்சைக்காரன் வந்திருந்தார்.

கண்ணனுக்கு அவரை கண்டதும் பெரும் ஆச்சரியம்!

இவர் பிச்சைக்காரன் அல்லவா? என்று எண்ணிக்கொண்டு இருந்தார்.

பள்ளி விழா நிறைவடைந்ததும் பிச்சைக்காரனை நோக்கிச் சென்று ஐயா, என்னை நினைவு இருக்கிறதா? என்று கண்ணன் கேட்டார்.

அன்பரே…நீங்களா?

உங்களை எப்படி மறப்பேன்?

உங்களால் தான் நான் இப்படி நல்ல நிலைமைக்கு வந்தேன்.

வாழ்க்கையில் நான் இப்படி முன்னேற உங்கள் பத்து ரூபாய் தான் காரணம் என்றார்.

என் வாழ்வில் என்னை மனிதனாக மதித்த முதல் மனிதர் நீங்கள்தான்.

நீங்கள் புத்தகத்திற்கு பணத்தை கொடுத்து வாங்கி கொண்டு இதுவும் தொழில் தானே என்று கேட்ட பிறகு தான் எனக்குள் உள்ள வியாபாரியை நான் கண்டுபிடித்தேன்.

அதுவரை பிச்சை எடுத்து திரிந்த நான் உங்களின் ஒரு வார்த்தையால் வியாபாரியாக மாறி உழைக்க ஆரம்பித்தேன்.

என்னுள்ளே நம்பிக்கை என்னும் விதையை விதைத்தவர் நீங்கள்தான்.

பிறகுதான் சிந்திக்க ஆரம்பித்தேன், நான் யார்? எனது கனவு என்ன? லட்சியம் என்ன? எதையாவது சாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

புத்தகங்களை விற்று இன்று நாடெங்கும் புத்தகக் கடைகளும் தொழில் நிறுவனங்களின் உரிமையாளராகவும் உள்ளேன்.

இப்படி என் வாழ்க்கை மாற நீங்கள் தான் காரணம், உங்களுக்கு கோடி நன்றிகள் என்று கூறினார்.

இளைஞர்களே!உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி திறமைகள் உண்டு, அதை எப்படி எந்த நேரத்தில் எந்த இடத்தில் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்பதை சிந்தித்து செயல்பட்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும்

உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்…

எஸ்.ஜெ.இலக்கியா
மயிலாடுதுறை

Related Post

One thought on “பிச்சைக்காரனின் உயர்வு”

Comments are closed.