Mon. Jun 30th, 2025

பழி யாருக்கு? – சிறுகதை

ஒரு அழகான கிராமத்தில் சஞ்சீவகன் என்ற ஏழை விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார்.

அவர் மிகவும் நேர்மையான மனிதர். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர்.

தனது அழகான மனைவி மற்றும் குழந்தைகளுடன் அக்கிராமத்தில் விவசாயம் செய்து தனது குடும்பத்தை நடத்தி வந்தார்.

சஞ்சீவனுக்கு சிறிது நிலம் மட்டுமே உள்ளது.

அதில் வேலை செய்து வரும் வருமானத்தில் தனது நாட்களை கழித்து வந்தார்.

நாட்கள் கழிந்தது, மழை இல்லாததால்  விவசாயத்தில் எந்த வருமானமும் இல்லை பசி,பட்டினி என்று மிகவும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டார்.

அவரது குடும்பம் மிகவும் வறுமையால் வாடியது.

நல்ல பண்புடைய மனிதர். தினமும் தூங்கும் போது கடவுளை திட்டிக்கொண்டே தூங்குவார்

இவ்வுலகில் உண்மை, நேர்மை என்ற வாழ்பவர்கள் யாரும் முன்னேற முடியவில்லை. பொய், பிறரை ஏமாற்றுபவர்கள் தான் நிறைய பணம் சம்பாதித்து சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்று கடவுளை திட்டிக் கொண்டு உறங்கினார்.

அன்று இரவு அவருக்கு ஒரு கனவு தோன்றியது.

கடவுள் ஒரு வயதான முதியவர் போன்ற உருவத்தில் தோன்றினார்.

சஞ்சீவகா, நீ மிகவும் நேர்மையானவன்.

உன்னை சோதிக்கத்தான் இந்த வறுமை நிலையை உருவாக்கினேன். உ னக்கு ஒரு வாய்ப்பை தருகிறேன் முடிந்தால் அதை பயன்படுத்திக் கொள் என்று கூறினார்

நாளை உன் வீட்டின் பின்புறம் உள்ள ஆற்றங்கரையில் உனக்கு ஒரு தேர்வு உள்ளது மிகவும் கவனத்துடன் செயல்படு என்று கூறி மறைந்தார்.

திடுக்கென்று கண் விழித்த சஞ்சீவகன் விடியலை எதிர்பார்த்து காத்திருந்தார்.

பொழுதும் விடிந்தது.

என்ன தேர்வாக இருக்கும் என்று புலம்பியபடி வீட்டின் பின்புறம் இருக்கும் ஆற்றங்கரை நோக்கி நடந்தார்.

குழப்பத்துடன் செல்லும்போது கல் தடுக்கி ஆற்றில் விழுந்தார்.

தண்ணீரில் தத்தளித்தபடி சஞ்சீவகன் மிதந்த நிலையில் இருந்தார்.

அவ்வழியாக வந்த முதியவர் கயிற்றை கொடுத்து சஞ்சீவகனை காப்பாற்றினார்.

மேலே வந்த சஞ்சீவகன் முதியவருக்கு நன்றியை தெரிவித்தார்.

வீடு திரும்பும் போது அங்கே உள்ள ஒரு முதியவருக்கு பாம்பு கடித்து விட்டது

அதை பார்த்து சஞ்சீவகன் மூலிகை செடியை தேடிச் சென்றார்.

அடர்ந்த காட்டிற்குள் மூலிகை செடியை தேடும் போது, அங்கே ஒரு பெட்டி கண்ணில் தென்பட்டது

அதை திறந்து பார்த்தபோது அதில் விலை உயர்ந்த நகை மற்றும் பணம் இருந்தது.

மிகவும் சந்தோஷப்பட்ட சஞ்சீவகன் அதை மண்ணில் போட்டு புதைத்து விட்டு மூலிகையை மட்டும் எடுத்துக்கொண்டு பாம்பு கடித்தவருக்கு கொடுத்து குணமடைய செய்தார்.

திரும்ப அந்த வழியே சென்று புதையல் இடத்திற்கு விரைந்து வந்து மண்ணைத் தோன்றி நகை மற்றும் பணங்களை கைப்பற்றி தனது வீட்டிற்கு செல்லும் வழியே ஒரு முதியவரை பார்த்தார்.

அந்த முதியவர் சஞ்சீவனிடம் இருந்த நகைகளை பிடுங்கிக் கொண்டார்

ஆத்திரமடைந்த சஞ்சீவகன் அந்த முதியவனை தடியால் அடித்தார்

தடியால் அடித்த உடனே அவர் உருவம் மறைந்து போனது.

நகை மற்றும் பணம் மட்டும் கீழே விழுந்தது.

சஞ்சீவகன் யோசனை செய்ய ஆரம்பித்தான்

கனவில் தோன்றிய முதியவரும், காட்டில் பார்த்த முதியவரும், ஆற்றில் காப்பாற்றிய முதியவரும், பாம்பு கடித்த முதியவரும் ஒருவரே என்பதை புரிந்து கொண்டான்

அனைவருமே கடவுளின் திருவிளையாடல் என்று புரிந்து கொண்டு மிகவும் ஆனந்தத்துடன் தனது வறுமை நீங்கியதை நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டு வீட்டை சென்று அடைந்தார்.

இந்த சம்பவத்தை சஞ்சீவகனின் பக்கத்து வீட்டுக்காரர் பூபாலன் பார்த்து விட்டார்.

ஓ! முதியவரை அடித்தால் பணம் மற்றும் நகைகள் கிடைக்குமா? என்ற வினாவுடன் நாமும் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று பூபாலனின் மனதில் எண்ணம் எழுந்தது.

அடுத்த நாள் அதே காட்டிற்குள் முதியவர் ஒருவர் வந்தார்.

அவரை பார்த்த பூபாலன் கீழே கிடந்த தடியை எடுத்து அந்த முதியவரை அடித்தான்.

முதியவர் கீழே மயங்கி விழுந்து இறந்து விட்டார்.

அங்கிருந்து பூபாலன் தப்பி ஓடி விட்டார். தகவல் அறிந்த காவல்துறையினர் பூபாலனை விசாரித்தனர்.

பக்கத்து வீட்டில் உள்ள சஞ்சீவனுக்கு  முதியவரை தடியால் அடித்ததால் நகை மற்றும் பணம் கிடைத்தது.

அதனால் எனக்கும் நகை பணம் கிடைக்கும் என்று முதியவரை அடித்தேன் என்று கூறினான். 

முதியவரை கொலை செய்யும் நோக்கம் எனக்கு இல்லை என்று கூறினான்.

பூபாலன் சொல்லும் காரணம் சரியான காரணமாக இல்லாததால் காவல் துறையினர் கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

விசாரித்த நீதிபதிகள் பூபாலனை சிறையில் அடைத்து தக்க தண்டனையை கொடுத்தனர்.

சஞ்சீவனுக்கு ஒரு சந்தேகம் நம்மை பார்த்து தான் பூபாலன் இவ்வாறு செய்திருப்பானோ? என்று மனதுக்குள் வினவினார்.

இருந்தாலும் இதுவும் கடவுளின் திருவிளையாடலாக இருக்குமோ?என்று தன் மனதிற்குள் வினவிக் கொண்டான்.

இவ்வுலகில் நேர்மையானவர்கள் துன்பப்பட்டாலும் கடவுள் ஏதோ ஒரு வழியில் கை கொடுப்பார்.

பூபாலனை போன்று பேராசை பிடித்தவர்களுக்கு தக்க தண்டனை கிடைத்தே தீரும் என்பது இக்கதையின் நீதி… 😊

எஸ்.ஜெ.இலக்கியா
மயிலாடுதுறை

Related Post