மழலை முதல்
மடியும் வரை
மனம் விரும்புவது
மகிழ்வளிக்கும் அன்பினையே
மண்ணுலகில் மானுடரும்
மற்றவுள உயிர்களுமே அடங்கிடுமே அன்பினுக்கே
அகிலமும் அன்பினாலே
ஆண்டவனும் அன்பினாலே
அனைத்துமே அன்பினாலே
அன்பில்லாதே ஏதுமில்லையே
அன்பே அனைத்துமாயினும்,
அன்பைப் பற்றிய புரிதல்கள்
ஆளாளுக்கு மாறுபட்டதாகவே உள்ளது
உறவுகள் வெவ்வேறு
உணர்வுகளும் வேறுவேறே
எனினும்
அன்பு அனைத்திடத்திலும் ஒன்றானதே….
ஆதலால்,
அன்பு அனைத்து உறவிலும் ஒரே உணர்வாகிடலாகுமோ?!
அழகான அற்புதமான அதிஉன்னதமான அன்பினை புரிதலில்லாமலே,
அசிங்கமாய் அநாகரிகமாய் அவமானப்பட செய்திடல் இன்றைய இழிசமூகத்தின் அவலமோ??
தாய்மை
தந்தைமை
சகோதரம்
காதல்
ஆக, அனைத்துறவுமே அன்பினாலேயேயானது
இவையன்றி
இதனினும் உயர்வெனவே உறவிலா உறவாய் உருவாகிடும் உயிர்தோழமையும்
ஆழ்ந்த அன்பினாலே ஆனதன்றோ
எனினும்
ஒவ்வோர் உறவிற்கும் வெவ்வேறு தனித்துவம் உளதன்றோ!
அந்தந்த உறவின் மதிப்பும் அந்தந்த நபரின் மதி சார்ந்ததாய் ஆகிடுமோ?..
மாதர் என்றாலே மழலை ஆயினும் மாதாவாயினும் மயங்கிடும் மானங்கெட்ட மதிகேடான மாந்தரிடையே தான் வாழ்ந்து வருகிறோம்
பால்மனம் மாறா பச்சிளம் குழந்தையே ஆனாலும் புணர்ந்திடும் நெறிகெட்ட வெறி பிடித்த…..
இப்படியாக அவ்வப்போது செய்திகளாய் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்
ஆணும் பெண்ணும் அவரவர் காரியம் ஆகிடவே அழகாய் வேசமிடும் பாசாங்காய் ஆகினதே நேசமிகுநேசமெல்லாம்
பணித்தளங்களிலும் வலைதளங்களிலும் அழகாய் பேசி ஆசைக்கு இணங்க வைக்கவே இயன்றவற்றை செய்கின்றனர்
இதுவோ அன்பினது இயல்பு
இல்லையே
எனினும் இயல்பாய் நடக்கிறது
இதனோடு தான் வாழ்கிறோம்
இப்போது
இதை நான் ஏன் சிந்தித்து வரைகிறேனெனில்..
சமீபத்தில் காணக் கிடைத்த சில தொலைக்காட்சி காணொளிகள்
என்னுள்ளே,
ஏதும் சொல்லாமல் ஏனிருக்கிறாய்? என உந்தித்தள்ளி என் அகக்கண்களைத் திறந்து சிந்திக்கத் தூண்டியது
சொல்வதெல்லாம் உண்மை பிரபல தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சி
அதிலே
தாய் வயதுடைய பிறன் மனைவியை தாரமாக்க போராடும் ஆணவமிகு ஆணவனின் ஆக்ரோசம்
கணவன் அனுமதியுடன் இன்னொருத்தியின் கணவனோடு வாழ வாதாடும் போதையுடை பேதைகளின் பேதைமை
இதையே சகிக்க இயலா நிலையில் இருக்கையில்,
தமிழா தமிழா சுட்டி பசங்க என்கிற சிறுவர் நிகழ்ச்சியில்,
ஆறே வயதான சிறுவனின் தாய்
அனைவரும் பார்க்கக்கூடிய ஒரு பொது ஒளிபரப்பில் ஆறு வயதில் என் பையன் ஐந்து லவ் பண்ணிட்டான் என சிரித்த முகமாய்
பெருமிதமாய் பகிரங்கமாய் ப(கி)கர்கிறார்
லவ் என்றால் என்ன?
காதல் காமம் பாசம் நேசம் இவற்றிற்கு ஏதும் வித்தியாசம் உள்ளதா?
இது எல்லாம் சிறுவயதிலேயே வளர்க்கும் போதே புரிய வைக்க வேண்டியது யாருடைய பொறுப்பு?!
இவர்களெல்லாம்
உறவின் உண்மை உணராதவரா?
உண்மையன்பின் புனிதம் புரியாதவரா?
இவர்களைப் பெற்றவர் பிழையா??
பிழையென வளர்த்தவர் குறையா..?!
இதில் என் பங்கேதுமில்லையே…
சமூகம் சரியில்லையென சாதாரணமாய் சமூகத்தின் மேல் பழி போட்டுவிட்டு சாக்கடைக்குள் சாக்கடையாய் சகதிக்குள் அகதியாய் சகட்டுமேனிக்கு சலனமின்றி சும்மா இருந்திடலாகுமோ..!?
ஆண்
பெண்
அண்ணன்
தங்கை
தந்தை
தாய்
நட்பு
காதல்
அத்தனையுமே அதனதன் தன்மையில் புனிதமானதன்றோ?முறைதவறாதவரை.!
வரைமுறை வகுத்து வாழவழி சொல்லி கொடுக்கவேண்டிய பெற்றோரே பெருமையாய் பேசிடில்,
பேராதிக்கமாய் பெருகிடும் உறவுப்பிழைக்குள்
ஊறி உறைந்து
நாறிப்போவது நலமோ?
அன்பின் அளவெது
அணுகும் விதமெது
அறியா நிலையிலே
பிடித்தவரோடெலாம் படுக்கையை பகிரும்,
பாழும் நிலை
பலுகி வருகிறது
தாம்பத்தியமும் தராதரமிழந்து
தறிகெட்டு
தாறுமாறாய் தி(தெ)ரிகிறது
காண்போரிடமெல்லாம் காமம் கொள்ளும்
காட்டுமிராண்டிகளா நாமெல்லாம்? கண்ணியமும் கனிவும்
கலந்ததன்றோ!? மனித இனம்
பெற்றோரோ பெரியோரோ உற்றாரோ உறவினரோ பொறுப்பெடுத்திடுவோம்
பொருட்படுத்தாமலே போவோமெனில்
பொசுங்கித்தானே போயிடுவோமே
புனிதமும் புரிதலுமில்லாதே..!! இப்புவியினிலே?

கன்னியாகுமரி