தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டத்திற்குட்பட்ட நாசரேத் பேரூராட்சி பகுதிகளில் இயங்கி வரும் சாலையோர வண்டி கடை வியாபாரிகளுக்கு முறையான அங்கீகாரம் (உரிமம்) மற்றும் அரசு நிதியுதவிகளை விரைந்து வழங்கக் கோரி, இந்து மகா சபா சார்பில் மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில பொதுச் செயலாளர் ராம்குமார் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நாசரேத் பேரூராட்சிப் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக ஏழை எளிய வியாபாரிகள் சாலையோர வண்டி கடைகள் அமைத்து நேர்மையான முறையில் வியாபாரம் செய்து வருகின்றனர். வெளியூர்களிலிருந்து வந்து தங்கிப் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் எளிய மக்களுக்குக் குறைந்த விலையில் தரமான உணவை வழங்கி, அவர்களின் பசி போக்கும் முக்கிய சேவையை இவர்கள் செய்து வருகின்றனர். மேலும், நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமாகவும் இத்தொழில் விளங்குகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகமும் நாசரேத் பேரூராட்சி நிர்வாகமும் இக்கோரிக்கையை முதன்மையானதாகக் கருதிப் பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
முறையான பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வரும் சாலையோர வண்டிக்கடை உரிமையாளர்களுக்கு தெருவோர விற்பனை உரிமம் உடனடியாக முறையான அங்கீகாரமும் லைசன்ஸும் வழங்க வேண்டும்.
மேலும் ஏழை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், அரசின் நலத்திட்டங்களின் கீழ் சலுகைக் கடன்களும், நிதியுதவிகளும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
வாழ்வாதாரப் பாதுகாப்பு: சாலையோர உணவகங்களை முறைப்படுத்தி, வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


