நாசரேத்தில் வியாபாரிகள் சங்க 50 வது ஆண்டு பொன் விழா நடந்தது.
சங்கத்தலைவர் எட்வர்ட் கண்ணப்பா தலைமை வகித்தார்.
பொதுச்செயலாளர் அசுபதிசந்திரன் வரவேற்று ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.பொருளாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.
முன்னாள் எம்பி ஏடிகே ஜெயசீலன், நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர், தணிக்கையாளர் மேகநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இதையடுத்து பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக அருணா குமரன் வழங்கிய மருதம் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
சென்னை _ நெல்லை வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூர் வரை நீட்டிக்க வேண்டும் , கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இயக்கப்பட்ட இடையன்விளை, திசையன்விளை, குட்டம், உடன்குடியில் இருந்து புறப்பட்டு நாசரேத் வழியாக சென்னை, கோவை, ஈரோடு, பெங்களூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு அரசு விரைவு பேருந்துகள் கொரோனா நேரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள், வியாபாரிகள் நலன் கருதி நிறுத்தப்பட்டுள்ள அரசு விரைவு பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும், நாசரேத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஏரல் சுபஸ்ரீ ஜுவல்லர்ஸ் உரிமையாளர் சுப்பையா மற்றும் வியாபாரிகள் திரளானோர் கலந்து கொண்டனர். சங்க துணைத்தலைவர் ( பொறுப்பு) புருஷோத்தமன் நன்றி கூறினார்.


