ஸ்ரீவை அருகே கருங்குளத்தில் மண்மேடாகி கிடந்த பாசன வாய்க்காலை விவசாயிகளே சீரமைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் கிராமம் அமைந்துள்ளது. கருங்குளம் பகுதியிலுள்ள பெரிய குளம், கிருஷ்ணன்குளம், பெட்டைக்குளம் ஆகிய குளங்களுக்கு மருதூர் அணையின் மேலக்கால் வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
இந்த பாசனக் குளங்களை நம்பி சுமார் 4000 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளது. இந்த குளங்களுக்கு தண்ணீர் வரும் கிளை வாய்க்கால் பராமரிப்பு இல்லாமல் மண்மேடாகி கிடந்தது.
இதனால், குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வரமுடியாத நிலை நிலவி வந்தது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், விவசாயிகள், ஊர்மக்கள் நலன்கருதி கருங்குளம் கீழூர் தேவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட உச்சினிமாகாளி அம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் கிளை வாய்க்காலை தூர் வாரி சீரமைக்க தீர்மானிக்கப்பட்டது.
இதற்கேற்ப பாசன விவசாயிகள் சங்கத்தினரும் கிளை வாய்க்காலை சீரமைக்க முன்வந்தனர்.
இதனைத்தொடர்ந்து இந்த சீரமைப்பு பணிகள் உச்சினிமாகாளி அம்மன் கோயில் நிர்வாக கமிட்டியினரான பரமசிவன், செந்தில்குமரன், பரதேசி, சின்னமாரிமுத்து, அங்கப்பன் ஆகியோர் வழிகாட்டுதல்படி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இரண்டு ஜே.சி.பி., மூலமாக கிளை வாய்க்காலிலுள்ள சீமைகருவேல மரங்கள் அகற்றப்பட்டு, வாய்க்காலை தூர் வாரி சீரமைக்கும் பணிகள் நேற்று தொடங்கியது. மேலும், தொடர்ந்து சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இப்பணிகளை கோயில் நிர்வாகிகள் பரமசிவன், செந்தில்குமரன், அங்கப்பன், பரதேசி, பாசன விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கராஜ், சிவசுப்பிரமணியன், சின்னமாரிமுத்து, கருங்குளம் பஞ்சாயத்து செயலர் சங்கரபாண்டி ஆகியோர் நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினர்.
பல வருடமாக மண்மேடாகி கிடந்த கிளை வாய்க்கால் தூர் வாரும் பணிகளை விவசாயிகள், கோயில் நிர்வாகிகளுடன் மேற்கொண்டு வருவது கண்டு விவசாயிகள், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


