Mon. Jun 30th, 2025

காலை உணவுத் திட்டத்தை சத்துணவுத் திட்டத்தோடு இணைத்து செயல்படுத்த சத்துணவு பணியாளர்கள் கோரிக்கை


காலை உணவு திட்டத்தை சத்துணவு திட்டத்தோடு இணைத்து சத்துணவு ஊழியர்களைக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சாத்தான்குளம் ஒன்றியம் 14வது வட்டார மாநாடு சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

வட்டாரத் தலைவர் பத்மா தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் விஜயராணி, துணைத் தலைவர்கள் அகிலா, உச்சி மேக்தலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .சுகந்தி இரங்கல் தீர்மானம் வாசித்தார். இணைச்செயலாளர் ஜெயச்சந்திரன் வரவேற்றார்.

மாவட்டத் தலைவர் ஜெயபாக்கியம் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார். வட்டாரச் செயலாளர் ஞான செல்வி, வட்டார பொருளாளர் சார்லஸ் செல்வநாதன், செயற்குழு உறுப்பினர்கள் ராமலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோர் செயல் அறிக்கைகளை வாசித்தும், தீர்மானங்களை முன்மொழிந்தும் பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் பொன்னரசி, சாத்தான்குளம் பிடிஓ மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க நிர்வாகி சுடலை ஆகியோர் பேசினர். சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் செல்லத்துரை நிறைவுரை ஆறறினார்.
.
சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ஒன்பதாயிரம் ரூபாய் அகவிலைப் படியுடன் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப காய்கறி, மளிகை ,உணவு மானியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். காலை உணவுத் திட்டத்தை சத்துணவுத் திட்டத்தோடு இணைத்து சத்துணவு ஊழியர்களைக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.

காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பிட வேண்டும். சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களை மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைத்து மருத்துவ வசதி செய்து தர வேண்டும். ஆண்டு முழுவதும் வாக்குச்சாவடி நிலை அலுவலராக தேர்தல் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களுக்கான தேர்தல் ஊதியம் ஆண்டுக்கு ரூபாய் 25,000 வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் காலாவதியான உணவுப் பொருட்களுக்கான தணிக்கைத் தடையை நீக்கம் செய்ய வேண்டும். கல்வித் தகுதி அடிப்படையில் சத்துணவு ஊழியர்களுக்கு பிற துறைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களில் பதவி உயர்வு மூலம் பணி வழங்க வேண்டும். பணியின் போது இறந்த ஊழியர்களின் ஆண் வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதம் ஊதியத்துடன் வழங்குவது போல் சத்துணவு ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு 12 மாதம் ஊதியத்துடன் வழங்க வேண்டும். பணிக்கொடை ஒட்டுமொத்த தொகையாக ஓய்வு பெறும் அமைப்பாளருக்கு ஐந்து லட்ச ரூபாயும் சமையல் உதவியாளருக்கு மூன்று லட்ச ரூபாய் வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் அந்தோணி கிறிஸ்டி ஹேமா நன்றி கூறினார்.

Related Post