Mon. Aug 25th, 2025

பேய்க்குளம் புனித தோமையார் ஆலய திருவிழா சப்பரபவனி

பேய்க்குளம் புனித மலையப்பர் என்ற தோமையார் ஆலய திருவிழாவில் சப்பரபவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் தோமையார்புரம் புனித மலையப்பர் என்ற தோமையார் ஆலய திருவிழா கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கியது.

தொடர்ந்து இத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6ஆம் தேதி) வரை 10 நாட்கள் நடைபெற்றது . திருவிழா முதல் நாளில் சாத்தான்குளம் வட்டார முதன்மை குரு செல்வ ஜார்ஜ் தலைமையில் ஜெப மாலை, புனிதரின் பிரார்த்தனை, திருவிழா கொடியேற்றம், திருப்பலி நடைபெற்றது.

கருங்கடல் பங்குத்தந்தை பாக்கிய ஜோசப் மறை உரை வழங்கினார். தொடர்ந்து ஆலய திருவிழாவில் தினமும் திருப்பலி மறையுறை ஜெபமாலை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

9ம் நாளான ஜூலை 5ஆம் தேதி காலை சவேரியார்புரம் பங்கு தந்தை பிராக்ரஸ் தலைமையில் ஜெபமாலை, புனிதரின் பிரார்த்தனை, திருப்பலியும், மாலை சாத்தான்குளம் மேரி இமாகுலேட் மெட்ரிகுலேஷன் பள்ளி அருள் தந்தை ரூபட் தலைமையில் திருவிழா சிறப்பு மாலை ஆராதனை நடந்தது. தென்மண்டல பள்ளிகளின் கண்காணிப்பாளர் ஜோசப் ஸ்டாலின் மறையுறை வழங்கினார். தொடர்ந்து புனிதரின் சப்பர பவனி நடந்தது.

10ம் நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6ஆம் தேதி) காலை தென் மண்டல பொறுப்பருள் தந்தை வெனி இளங் குமரன் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி, ஜெபமாலை புனிதரின் பிரார்த்தனை நடைபெற்றது. அருள் தந்தை பெப்பி மறையுறை வழங்கினார். தொடர்ந்து புனிதரின் சப்பர பவனி நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மாலை கொடி யிறக்கம், நற்கருணை ஆசீர், மற்றும் பங்குத்தந்தை சந்திப்பு நன்றி நிகழ்ச்சி நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பிராக்ரஸ் தலைமையில் அருள் சகோதரிகள், இறை மக்கள் செய்திருந்தனர்

Related Post