Sun. Jun 29th, 2025

போதை பொருள் கடத்தல், விற்பனை மட்டுமல்ல, பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றமே – இந்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தென்மண்டல தலைவர் அரவிந்தன் பேட்டி

போதைப் பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க தமிழ்நாட்டில் 25 மருத்துவ கல்லூரிகளில் போதை மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் பிரபுசங்கர் என தெரிவித்தார்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மஞ்சாங்கரணை பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ கழகமும், தனியார் மருத்துவ கல்லூரியும் இணைந்து போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இந்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தென்மண்டல தலைவர் அரவிந்தன், சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் பிரபு சங்கர், இந்திய மருத்துவ கழக தமிழ்நாடு தலைவர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தென்மண்டல தலைவர் அரவிந்தன், கல்வி நிறுவனங்களில் போதை பொருள் ஒழிப்பு குறித்து மாணவர்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

போதை பொருள் கடத்தல், விற்பனை மட்டுமே சட்டப்படி குற்றம் என்பதல்ல, போதை பொருள் பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றமே என தெரிவித்தார். போதை பொருள் பயன்படுத்தும் அளவை பொறுத்து நுகர்வோருக்கும் 6 மாதம் முதல் 2 வருடம் வரை தண்டனை வழங்க வாய்ப்புள்ளது என்றார்.

போதை பொருள் பயன்பாட்டிற்கு அடிமையானால் அதிலிருந்து விடுபடுதல், சிகிச்சை முறைகள் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது எனவும், போதை பொருளுக்குள் போகாதீர்கள், அதில் சிக்கி இருந்தால் சரியான உதவியை நாடுங்கள் என்றும் போதை பொருளுக்கு எதிராக அரசு அதிகாரிகளுடன் இணைந்து பொது மக்களும் விழிப்புணர்வு பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

போதை பொருள் பயன்பாடு என்பது திரையுலகம் மட்டுமே என குறிப்பிட்டு கூற முடியாது எனவும், குறிப்பிட்ட துறைக்கும் போதை பொருள் பயன்பாட்டிற்கும் தொடர்பு இல்லை என்றார். கஞ்சா பயிரிடப்படுவதை சாட்டிலைட் மேப் மூலம் கண்டறிந்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதனை அழித்து வருகிறோம் எனவும், சாலை மார்க்கம், கடல் வழி, வான் வழி என அனைத்து மார்க்கங்களிலும் போதை பொருள் கடத்தலை தடுக்க அனைத்து துறை அதிகாரிகளுடன் இணைந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டில் 2000 கிலோ கஞ்சா, 20 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்து, 64 பேர் கைது செய்யப்பட்டனர் எனவும், தமிழ்நாட்டில் 2025ஆம் ஆண்டு தற்போது வரையில் 1400 கிலோ கஞ்சா, ஆஷிஷ் என்ற வகையை போதை பொருள் 16 கிலோ, 2 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டு, 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் கடத்தல் வழக்கில் தொடர்புடைய நபர்களின் 12 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் பிரபுசங்கர், போதைபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாகவும், போதைப் பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க தமிழ்நாட்டில் 25 மருத்துவ கல்லூரிகளில் போதை மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார். முன் எப்போதும் இல்லாத வகையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து போதை பொருட்களை பறிமுதல் செய்து வருவதாகவும், போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களின் சொத்துக்களை முடக்கி, பறிமுதல் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். போதை பொருள் கடத்தல், விடுபடுதல் உள்ளிட்ட தகவல்களை தெரிவிக்க 10581 என்ற கட்டணமில்லா எண் தமிழ்நாடு அரசால் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே போதை பொருள் பயன்பாட்டை கண்டறிய 67000 பள்ளி மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது எனவும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தற்போது மறுவாழ்வு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும், 2025ஆம் ஆண்டு “Lets break the Cycle” போதை பொருள் பயன்பாடு சுழற்சியை உடைக்க வேண்டும் என்ற கோட்பாட்டுடன் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது என்றும் அப்போது தெரிவித்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *