Mon. Jun 30th, 2025

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையின் அவலம் – உயிரை பறிகொடுத்த குடும்பத்தினரை அலையவிட்ட பரிதாபம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா பேய்க்குளம் அருகே உள்ள மீரான்குளத்தை சேர்ந்தவர் விக்டர் அவர்களின் மகன் வினோத் (26) என்பவர் அலைபேசி தொலைந்ததால் இன்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

மேற்படி நபரின் சாத்தான்குளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

சுமார் 2 மணியளவில் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு சென்ற உடலினை பிணவறையில் வைக்க குளிர்சாதன வசதி இல்லாத காரணத்தினால், இளவயதில் தற்கொலை செய்த வாலிபரின்  குடும்பத்தினரிடம் குளிர்சாதன பெட்டியை வாடகைக்கு எடுத்து வந்து பிணவறையில் வைக்கும்படி மருத்துவமனை ஊழியர்கள் கூறிவிட்டு சென்றுவிட்டனர்

வாலிபரின் உறவினர்கள் சாத்தான்குளத்தில் குளிர்சாதன பெட்டியை வாடகைக்கு எடுத்து பிணவறையில் வைத்துள்ளனர். மருத்துவமனை ஊழியர்களிடம் குளிர்சாதனப்பெட்டி எடுத்து வந்து விட்டதை தெரிவித்த பிறகு, பிணவறையில் மின்சாரம் வேலை செய்யவில்லை மின் வயர் வாங்கி வாருங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

வாலிபரின் உறவினர்கள் மீண்டும் சென்று மின் வயர் வாங்கி வந்துள்ளனர். அதன் பிறகும் பிணவறையில் குளிர்சாதன பெட்டிக்குள் உடலே வைக்க மருத்துவமனை ஊழியர்கள் மறுத்து விட்டனர்.

மருத்துவமனை ஊழியர்களிடம் இது பற்றி உறவினர்கள் கேட்ட பொழுது மருத்துவமனையில் இருந்து மின்சாரம் வழங்கினால் மின் கட்டணம் உயர்ந்து விடும் அதனால் பிணவறைக்கு மின்சாரம் வழங்கக் கூடாது என சாத்தான்குளம் அரசு மருத்துவர் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர்

அதன் பிறகு சாத்தான்குளம் காவல்துறையினர் மனிதாபிமானத்தோடு செயல்பட்டு சாத்தான்குளம் காவலர் குடியிருப்பில் இருந்து மின்சாரம் வழங்கி குளிர்சாதன பெட்டியில் வாலிபரின் உடலை வைத்துள்ளனர்.

ஏற்கனவே சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மீது பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ள நிலையில், தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் குடும்பத்தினரை அலைய விட்டதை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வன்மையாக கண்டித்துள்ளனர்

சாத்தான்குளம் அரசு மருத்துவமணையில் பிணவறையில் குளிர்சாதன வசதி செய்து கொடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் அனுப்பப்பட்டும், குளிர்சாதன வசதி செய்து கொடுப்பதற்கு எந்த விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்

Related Post