தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் அனல்மின் நிலையம், ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு ஏற்கனவே பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
தற்போது அவற்றின் விரிவாக்கத்திற்கு என மேலும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளும் பொதுமக்களும் நேற்று ஒன்றாக கூடி தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நல அமைப்பின் தலைவர் ஜி.டி.சந்திரசேகரன் அவர்கள் தலைமையில் ஆலோசித்தனர்.
இந்தக் கூட்டத்திற்கு சமூக ஆர்வலர் அசோக் சுப்பையா, தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்க பொதுச்செயலாளர் முகைதீன், ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் கனகராஜ், வெள்ளாளன்விளை ஊராட்சி மன்ற தலைவர் ராஜரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த அமைப்பின் சட்ட ஆலோசகரும் மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான ராஜீவ் ரூபஸ் வரவேற்புரை ஆற்றினார்.
உடன்குடி பொதுநலக்குழு தலைவரும் ஓய்வுபெற்ற தூத்துக்குடி ஸ்பிக் நிறுவன மேலாளருமான பாஸ்கர் வேலாயுதம், தூத்துக்குடி மாவட்ட பம்பு செட் விவசாய சங்க தலைவர் ஆறுமுகபாண்டியன், கருமேனிஆறு பாதுகாப்பு சங்கத் தலைவர் கணேசன்,
தாங்கைக்குளம் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஜெயக்குமார் சண்முகவேல், சிறுநாடார் குடியிருப்பு ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.கமலம் அம்மாள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடிய மழைக்காலத்தில் வீணாக கடலில் கலக்கும் தாமிரபரணி நீரால் நிரப்பப்பட வேண்டிய உடன்குடி சாத்தான்குளம் பகுதியில் வறண்டு கிடக்கும் குளங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்
கருமேனி ஆற்றில் வரும் மழைநீரை பல்வேறு திட்டங்களுக்காக மடை மாற்றம் செய்வதால் விவசாயிகளின் நலன் பாதிக்கப்படுவதாகவும், கருமேனிஆறு நம்பியாறு இணைப்பு என்ற பெயரில் கருமேனிஆற்று நீரை மற்ற இடங்களுக்கு கொண்டு செல்வது விவசாயிகளிநலன் பாதிக்கப்படுவதாகவும், அதனால் கருமேனி ஆற்றில் வரும் இயற்கையான மழை நீரை எவ்விதமான தடையும் இல்லாமல் உடன்குடி சாத்தான்குளம் பகுதிகளுக்கு செல்வதற்கான உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்கத்திற்கு மேலும் 1500 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்துவதால் விவசாயிகளின் நலன் மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே விவசாய நிலத்தை மேலும் கையகப்படுத்துவதை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
ஏற்கனவே அரசு ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு 1100 ஏக்கர் நிலம் எடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தபோது பாதிக்கப்பட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் 27.9.2023 அன்று விவசாயிகளின் முன்னிலையில் கோட்டாட்சியர் அவர்கள் சார்பாக திருச்செந்தூர் வட்டாட்சியர் மூலம் நிலம் எடுக்கப்படாது என எழுத்துபூர்வமாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராக்கெட் ஏவுதளத்தை காரணம் காட்டி மீண்டும் ஏரோஸ்பேஸ் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இது இப்பகுதி விவசாயத்தை முற்றிலும் அழிக்கும் செயலாக இருக்கும் என்பதனால் ராக்கெட் ஏவுதளம் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு மீண்டும் நிலம் எடுப்பதை கைவிட வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி 27.12.2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3 மணி முதல் 7 மணி வரை உடன்குடி பாரதி திடலில் வைத்து காவல்துறையின் அனுமதியோடு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளனர்