Sun. Jun 29th, 2025

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் திருவள்ளுவர் குறித்த கட்டுரை போட்டி

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் குறித்த வட்டார அளவிலான கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றது.

குமரி கடலில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவரின் 133 அடி உயர சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெற இருப்பதை முன்னிட்டு தமிழ் நாடு முழுவதும் நடைபெறுகின்ற பள்ளி மாணவர்களுக்கிடையேயான கட்டுரைப் போட்டிகளின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி வட்டார அளவிலான கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன.

அய்யன் திருவள்ளுவரின் அடி தொடர சூளுரைப்போம், எனக்குப் பிடித்த திருக்குறள் ஆகிய இரண்டு தலைப்புகளில் மாணவர்கள் ஏதேனும் ஒரு தலைப்பில் கட்டுரை எழுதும் வகையில் போட்டிகள் நடைபெற்றது.

6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் கட்டுரைப் போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றன.

தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியர் ஆபிரகாம் இமானுவேல் முன்னிலை வகித்தார். தமிழ் ஆசிரியர் அம்புரோஸ் சுகிர்தராஜ் வரவேற்றார். தமிழ் ஆசிரியர் வின்ஸ்டன் ஜோஸ்வா போட்டிகளுக்கான விதிமுறைகளை விரிவாக மாணவர்களுக்கு எடுத்து கூறினார்.

தலைமை ஆசிரியர் குணசீலராஜ் கட்டுரைப் போட்டிகளை துவக்கி வைத்தார்.

போட்டிகளில், ஆழ்வார்திருநகரி வட்டாரத்தைச் சார்ந்த காமராஜ் மேல்நிலைப்பள்ளி நாலுமாவடி, புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி புன்னைக்காயல், தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி மூக்குபீறி, இந்து மேல்நிலைப்பள்ளி ஆழ்வார் திருநகரி, தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாசரேத், எஸ் எஸ் என் மேல்நிலைப்பள்ளி ஆத்தூர், மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி நாசரேத் ஆகிய பள்ளிகளைச் சார்ந்த மாணவ,மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழ் ஆசிரியர் எட்வின் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் பட்டதாரி தமிழ் ஆசிரியைகள் செல்வம் ஜெபசீலி, ரூபி பொற்செல்வி மற்றும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தாளாளர் சுதாகர் வழிகாட்டுதலின்படி இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Post