சாத்தான்குளத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும் மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், 70 வயது கடந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10% ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், வன காவலர்கள், பட்டு வளர்ச்சித் துறை ஊழியர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 7850 வழங்க வேண்டும்.

காப்பீடு திட்டத்தின் மருத்துவ செலவுத் தொகை திரும்ப பெற நீண்ட காலமாக தேங்கியுள்ள மனுக்களை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்து வைக்க வேண்டும். கருவூல கணக்குத்துறை ஆணையாளர் அளித்த வாக்குறுதியின் படி மருத்துவ காப்பீடு திட்டம் செலவுத் தொகை திரும்பப்பெறும் மனுக்களின் நிலைமைகளை கண்காணித்து தெரிந்து கொள்ள ட்ராக்கிங் சிஸ்டம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஓய்வூதியர்களுக்கு கமுட்டேஷன் பிடித்தம் காலத்தை 10 ஆண்டு காலமாக குறைத்திட விட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் சாத்தான்குளம் பழைய பஸ் ஸ்டாண்ட் காமராஜர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர தேவ சமாதானம் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் பாண்டியன், வேல்க்கனி, அல்போன்ஸ் மேரி ,இணைச் செயலாளர்கள் சேசுமணி, கிறிஸ்டோபர், செல்ல தங்கம், இசக்கியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டச் செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் ஜெயபால், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் தம்பிராஜ் ஈனோக், ஓய்வு பெற்ற மின் ஊழியர் நல அமைப்பு மாநில துணைத் தலைவர் ஜெயபாண்டியன், சாத்தான்குளம் அரசு ஊழியர்கள் சங்க முன்னாள் வட்டத் தலைவர் பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற தாசில்தார் நடராசன், விவசாய தொழிலாளர் சங்க முன்னாள் வட்ட பொருளாளர் பாலசுந்தர கணபதி, ஆகியோர் பேசினர்.
மாவட்டத் தலைவர் திரவியம் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.சேசுமணி,பாண்டி, காந்திமதி நாதன், முருகேசன் உட்பட ஓய்வூதிய சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். வட்டப் பொருளாளர் ரூபவதி நன்றி கூறினார்.