ஒரு பக்க கதை
காதில் ஹெட்போனும் கையில் விர்ச்சுவல் ஐபேடுமாக டிஜிட்டல் செய்திகளை புரட்டிக் கொண்டிருந்தார் தாத்தா.
2123-2124 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் குறித்து படித்துக் கொண்டிருந்த போது பறக்கும் தட்டை பரபரப்பாக வாசலில் நிறுத்திவிட்டு அவசர அவசரமாக தன் முதுகில் இருந்த ஆக்சிசன் சிலிண்டரை ரீ-ஃபில் செய்ய புகுத்திவிட்டு கார்போஹைட்ரேட் கேப்சூல்களை எடுத்துக் கொண்டிருந்தான் பேரன்.
“ஏன் இப்படி அலையுற?, எப்பவும் கூடுதலா நாலு கேப்சூல் கைவசம் வச்சுக்கலாம்ல” என்றார் தாத்தா.
“எதுக்கு என் நண்பர்கள் எல்லாம் என்கிட்ட இருந்து வாங்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டு போறதுக்கா?” என கேட்ட பேரனிடம்,
“என்னய்யா இப்படியெல்லாம் பேசுற, ஆயிரந்தான் இருந்தாலும் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புக-னு சொன்ன மரபுயா நம்ம மரபு… பார்க்குறவன எல்லாம் கூப்பிட்டு அவன் பசியாற சோறு போட்டு அழகு பார்த்த பண்பாடு நம்ம பண்பாடு” என சொன்னார் தாத்தா.
” நமக்கே மூணு வேள கேப்சூலும், சுவாசிக்க ஆக்சிசன் கிடைக்கிறதுமே பெரிய பிரச்சினையா இருக்கு, இதுல அடுத்தவனுக்கு வேறயா… முன்னோர் முன்னோர்னு சொல்றிங்களே அப்படி என்னத்த செஞ்சாங்க நமக்குனு… அடுத்தவனுக்கு சோறு போட்டா போதுமா? அதுக்கு 4 ஆக்சிசன் பிளானட் வாங்கி போட்டிருந்தா கூட இன்னேரம் நாமெல்லாம் கோடீஸ்வரனுங்க தெரியுமா?” என்றதோடு, பெருசா பேசுறாரு முன்னோர்னு என முணுமுணுத்த பேரனுக்கு,
“யாருய்யா சொன்னா ஆக்சிசன் பிளானட் இல்லனு… இருந்துச்சு, ஆனா அதத்தான் அழிச்சுட்டிங்களே…” என பதில் சொன்னார் தாத்தா.
தாத்தாவின் பதிலால் ஒன்றும் புரியாதவனாக “என்ன தாத்தா சொல்ற? எனக்கேட்டான் பேரன்.
“மரம்னா என்னனு தெரியுமாய்யா?” எனக்கேட்ட தாத்தாவிடம்,
“ஓ… 2080 வரை ஒருசில இடங்கள்ல இருந்ததா சேட்டிலைட் ரெக்கார்ட்ஸ்-ல படிச்சுருக்கேன்…
இப்போ அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் எதுக்கு பேச்ச மாத்துர?” என பதில் கேள்வி எழுப்பினான் பேரன்.
“சம்பந்தம் இல்லாம இல்லய்யா… அந்த மரங்கள் தான் நம்ம முன்னோர்களோட ஆக்சிசன் பிளானட்டே…
எந்த எக்ஸ்டர்னல் எனர்ஜி சப்போர்ட்டும் இல்லாம நம்ம முன்னோர்களுக்கு தூய்மையான ஆக்சிசன் காத்த சுவாசிக்க கொடுத்துச்சு…”
என தாத்தா சொல்லிக் கொண்டிருந்த வேளையில் திடீரென குறுக்கிட்டு,
“அப்பறம் எப்படி அதெல்லாம் இல்லாம போச்சு?” என குறுக்குக்கேள்வி எழுப்பினான் பேரன்.
“எங்க தாத்தாவோட தாத்தா நிறைய மரங்கள நட்டாரு…
எங்க தாத்தா அதையெல்லாம் பராமரிச்சு பாதுகாத்தாரு…
நான் என் கூட்டாளிகள்ளாம் கூட மரங்கள பாதுகாக்க எவ்வளவோ போராடுனோம்…
ஆனாலும் சிலர் தங்களோட சுய இலாபத்துக்காக வெட்டுனாங்க…
பலர் தங்களோட நிறுவனங்கள விளம்பரப்படுத்த பதாகைகள மரத்துல ஆணி அடிச்சு மரத்தோட ஆயுளை குறைச்சு இப்போ மரமே இல்லாத காலத்தை உண்டாக்கிட்டாங்க…
மரம் இல்லாம மழைனு ஒண்ணு இல்லாம போச்சு…
மழைனு ஒண்ணு இல்லாததால அரிசி, தானியம்னு எதுவும் இல்லாம கேப்சூல் முழுங்குற காலம் ஆச்சு…
இப்போ ஆக்சிசன் இல்லாம நம்மல ஏங்க வேண்டிய நிலமையாச்சு…” என சொல்லி கலங்கினார் தாத்தா.
திரும்பவும் மரங்கள நம்மால உருவாக்க முடியாதா தாத்தா என கேட்ட பேரனுக்கு,
“ஒரே ஒரு வழிதான் இருக்கு அதுக்கு 100 வருசத்துக்கு முன்னாடி போய் மரங்கள பாதுகாக்குறதும், புதுசா மரங்கள உருவாக்குறதும்தான்…” என்றார் தாத்தா.
“ஒருநாள் இதே மாதிரி நீயும், நானும் ஒரு மரத்தடியில உக்காந்து பேசுற நிலைம வரும் தாத்தா” என்ற பேரனிடம், “எப்படி?” என வினவினார் தாத்தா.
தன் தாத்தாவின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு தான் உருவாக்கிய காலக்கடத்தி எந்திரத்தால் 100 ஆண்டுகள் முன்னோக்கி சென்று, தங்கள் ஊரைச் சுற்றி மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியினை முடித்துவிட்டு, தாத்தாவை பத்திரமாக மீண்டும் 2124ஆம் ஆண்டிற்க்கு அழைத்து வந்தான் பேரன்.
அங்கே ஆக்சிசன் உருளைகள் இல்லாமல் இருந்தது மாறாக அவன் நடவு செய்த மரங்கள் எல்லாம் நன்றாக வளர்ந்து பெருகி இருந்தது.
தாத்தாவும் பேரனும் மரத்தடியில் அமர்ந்துகொண்டு பேசிச் சிரித்தபடி மதிய உணவை சாப்பிட்டனர்.

காரைக்குடி