Mon. Jun 30th, 2025

ஆன்லைனில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதால் தாமதம் – பொதுமக்கள் அவதி

வழக்கை பட்டியலிட்டு கோப்புக்கு நீதிமன்றம் எப்போது எடுக்கும் என நீதிக்காக காத்திருக்கும் வழக்காடிகள்

ஆனால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகள் மூன்று அல்லது நான்கு நாட்களில் பட்டியலிடப்பட்டு கோப்புக்கு எடுக்கும் அதிசயம் எப்படி என வழக்காடிகள் கேள்வி

தமிழகத்தில் தற்போது ஆன்லைனில் வழக்கு தாக்கல் செய்ய நீதிமன்றங்களில் வழிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உயர் நீதிமன்றங்களில் ஆன்லைனில் வழக்கு தாக்கல் செய்வது என்பது நடைமுறையில் உள்ளது. ஆன்லைனில் வழக்கு தாக்கல் செய்து மூன்று அல்லது நான்காவது நாட்களில் வழக்கை உயர் நீதிமன்றங்கள் பட்டியலிட்டு கோப்புக்கு எடுத்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. அதேபோல கீழமை நீதிமன்றங்களிலும் வழக்கை ஆன்லைனில் தாக்கல் செய்ய வேண்டும் என்று வழிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ள நிலையில் சில வழக்குகள் ஆன்லைனில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நடைமுறை கிழமை நீதிமன்றங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை நீதிமன்றங்களில் ஆன்லைனில் வழக்கை தாக்கல் செய்யும் நடைமுறை உள்ளதாகவும் அதன்படி ஆன்லைனில் வழக்கு தாக்கல் செய்து அது இதுவரை பட்டியலிடப்படாமல் சுமார் இரண்டு மாதத்திற்கு மேல் தூக்கத்தில் அதை வைத்துள்ளதாகவும் நீதிக்காக காத்திருக்கும் வழக்காடிகள் குற்றம் சாட்டுகின்றனர். காவல்துறையினரிடம் புகார் கூறியும் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை எனில் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களை வழக்காடிகள் அணுகுவது இயல்பு. கடந்த காலங்களில் நேரடியாக வழக்கை தாக்கல் செய்யும் நடைமுறை இருந்தபோது வழக்கை தாக்கல் செய்த மூன்றாவது அல்லது நான்காவது நாளில் வழக்கு பட்டியலிடப்பட்டு கோப்புக்கு எடுப்பது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது ஆன்லைனில் வழக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நடைமுறை உருவான பின்னர் ஆன்லைனில் தாக்கல் செய்யப்படும் வழக்குகள் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் மாத கணக்கில் கோப்புக்கு எடுக்கப்படாமல் அந்த வழக்கை பட்டியலிடாமல் வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வழக்காடிகளுக்கும் வழக்கறிஞருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் கூட ஏற்படும் சூழல் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே இணைய சேவை தமிழகத்தில் பல இடங்களில் சரியாக கிடைக்காத நிலை தான் காணப்படுகிறது. இந்த நிலையில் ஆன்லைனில் வழக்குகள் தாக்கல் செய்யும் நடைமுறையை தள்ளி வைக்க வேண்டுமென்று தமிழகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வந்தனர். தற்போதும் ஆன்லைனில் வழக்குகள் தாக்கல் செய்யும் நடைமுறையை சற்று தள்ளி வைக்குமாறு கோரியும் தங்களது கோரிக்கையை பரிசீலனை செய்யுமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழகமெங்கும் இணையதள சேவை சிறப்பான ஒரு நிலையை எட்டும் வரை ஆன்லைனில் வழக்குகள் தாக்கல் செய்வது என்ற நடைமுறையை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறிவரும் கருத்துகள் வழக்கறிஞர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த நிலையில் கோவையில் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகள் கடந்த இரண்டு மாதமாக பட்டியலிடப்படாமல் உள்ளதாகவும் அது எப்போது பட்டியலிடப்படும் என வழக்கை தங்கள் வழக்கறிஞர்கள் மூலம் தாக்கல் செய்துவிட்டு வழக்காடிகள் நீதிக்காக நெடு நாட்களாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தாமதப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி என்ற நிலை ஏற்பட்டு விடாமல் இருக்க ஆன்லைனில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலையை வரையறுத்துள்ள நீதிமன்றங்கள் ஆன்லைனில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக பட்டியலிட்டு கோப்புக்கு எடுத்து வழக்காடிகளுக்கு நீதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Post