
உலக புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டினம் தசரா திருவிழாவிற்கு அனைத்து கிராம மக்களும் காப்பு கட்டி விரதமிருந்து வேடமணிந்து பொதுமக்களிடம் காணிக்கை பெற்று கோயிலில் நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று (11.10.2024 வெள்ளிக்கிழமை) தூத்துக்குடி மாவட்டம் மெய்ஞ்ஞானபுரம் அருகில் உள்ள ராமசுப்ரமணியபுரம் கிராமத்தை சேர்ந்த தசரா குழுவினர் வேடமணிந்து மெய்ஞ்ஞானபுரம் பஜாரில் காணிக்கை பெற்று கொண்டிருந்த போது அங்கு வந்த சாத்தான்குளம் டிஎஸ்பி சுபகுமார் தசாரா குழுவினரை மெய்ஞானபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார. மெய்ஞ்ஞானபுரம் காவல் நிலைய அதிகாரிகளிடம் நான் கூறிய பிறகு தான் இவர்களை விடுவிக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.


இந்த சம்பவம் குறித்து அறிந்த பிற தசரா குழுவினர் மற்றும் கிராம மக்கள் மெய்ஞ்ஞானபுரம் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் காவல் நிலையத்திலிருந்து பக்தர்களை உடனடியாக காவலர்கள் விடுவித்தனர்.
சென்னையில் இருந்து சாத்தான்குளத்திற்கு பணிமாறுதல் பெற்று வந்துள்ள சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் சுபகுமார் அவர்கள் தசரா குழுவினர் காவல் நிலையத்தில் சிறை வைத்த செயல் கடும் கண்டனத்திற்குரியது என்றும், பொதுமக்களிடம கடுமையாக நடந்து கொள்ளும் இது போன்ற செயல்களால் காவல்துறைக்கு பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுகிறது எனவும் இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுபகுமார் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்