Mon. Jun 30th, 2025

சாத்தான்குளத்திலிருந்து பெரியதாழைக்கு அரசு பஸ் இயக்க தமிழ்நாடு அரசு ஓய்வூதிய சங்கத்தினர் கோரிக்கை

சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள ஒரே கடற்கரை கிராமமான பெரியதாழைக்கு சாத்தான் குளம் வழியாக திருநெல்வேலியிலிருந்து மதியம் ஒரு முறை மட்டும் தனியார் பேருந்து சென்று வருகிறது. பகல் வேளையில் வேறு பஸ்கள் செல்லவில்லை.

தாலுகா தலைமையிடமான சாத்தான்குளத்தில் தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண்மை அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனை, சார்நிலைக் கருவூலம் மற்றும் பல அரசு அலுவலகங்கள் உள்ளன.  அலுவலக தேவைகளுக்காக பெரியதாழையிலிருந்து சாத்தான்குளம் வர வேண்டுமென்றால் உடன்குடி அல்லது திசையன்விளை சென்று வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

எனவே சாத்தான்குளத்திலிருந்து முதலூர், பொத்தக்காலன்விளை, போலையர்புரம், தட்டார்மடம், கொம்மடிக்கோட்டை, சொக்கன்குடியிருப்பு, மணிநகர், சுண்டங்கோட்டை, படுக்கப்பத்து வழியாக பெரியதாழைக்கு அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ஜெயபால் தலைமையில் வட்டத் தலைவர் தேவ சமாதானம், வட்ட துணைத் தலைவர் பாண்டியன், இணைச்செயலாளர் கிறிஸ்டோபர், அரசு ஊழியர் சங்க முன்னாள் வட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற மின் ஊழியர் நல அமைப்பு மாநில துணைத் தலைவர் ஜெய பாண்டியன், ஓய்வு பெற்ற டவுன் பஞ்சாயத்து செயல அலுவலர் முருகேசன், ஓய்வு பெற்ற வன இலாகா ஊழியர் காந்திமதி நாதன், ஓய்வு பெற்ற ஆசிரியர் சுடலைக்கண், நெடுஞ்சாலைத்துறை முத்துராமலிங்கம் உட்பட ஓய்வு பெற்ற அலுவலர் சங்க நிர்வாகிகள் சாத்தான்குளம் தாசில்தார் இசக்கி முருகேஸ்வரியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட தாசில்தார் உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தார். வட்ட வழங்கல் அலுவலர் பிரபு உடனிருந்தார்.

Related Post