நாலுமாவடியில் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு நடந்த கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான மின்னொளி கால்பந்து இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி அணிக்கு மோகன் சி. லாசரஸ் ரெடீமர்ஸ் கோப்பை பரிசை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறார் விளையாட்டுத்துறை சார்பில் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 2ம் ஆண்டு ரெடீமர்ஸ் கோப்பைக்கான கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான மின்னொளி கால்பந்தாட்ட போட்டி நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஏலிம் கார்டன் விளையாட்டு மைதானத்தில் 2 நாட்கள் நடந்தது.
போட்டியில் தமிழகத்தில் சிறந்த கல்லூரி அணிகளான தூத்துக்குடி காமராஜ் கல்லூரி, விருதுநகர் கலசலிங்கம் பல்கலைக்கழகம், நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி, கோவை காருண்யா கல்லூரி, மதுரை சேது கல்லூரி, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி, வீரவநல்லூர் ஜான்ஸ் கல்லூரி உள்ளிட்ட 12 கல்லூரி அணிகள் பங்கேற்றன.
இறுதிப்போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி அணியும், விருதுநகர் கலசலிங்கம் பல்கலைக்கழகம் அணியும் மோதின. ஆட்டம் முடியும் வரை 2 அணிகளும் கோல் எதுவும் போடாததால் டைப்பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.
இதில் நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி அணி 5:4 கோல் கணக்கில் வெற்றி பெற்று ரெடீமர்ஸ் கோப்பையை தட்டிச் சென்றது.
போட்டியின் நடுவர்களாக ராம்தாஸ், இஸ்மாயில், ஜமால், செல்வராஜ், கிருபா, அஜய் ஆகியோர் செயல்பட்டனர்.
முன்னதாக இறுதிப்போட்டியை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி . லாசரஸ் வீரர்களை அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார். பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது.
ஊழியர் அவினிசா ஆரம்ப ஜெபம் செய்தார். தூத்துக்குடி மாவட்ட கால்பந்து கழக இணை செயலாளர் ஆனந் முன்னிலை வகித்தார். சென்னை சுங்கத்துறை அதிகாரி ராபின்சன், முன்னாள் தேசிய உயரம் தாண்டுதல் வீராங்கனை ஏஞ்சலா லின்சி ராபின்சன், குரும்பூர் போலீஸ் சப்_ இன்ஸ்பெக்டர் சிவராஜா ஆகியோர் மாணவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.
இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி அணிக்கு ரெடீமர்ஸ் கோப்பை மற்றும் ரொக்கப்பணம் ரூ.25 ஆயிரமும், 2 வது இடத்தை பிடித்த விருதுநகர் கலசலிங்கம் பல்கலைக்கழகம் அணிக்கு ரெடீமர்ஸ் கோப்பை மற்றும் ரொக்கப்பணம் ரூ.15 ஆயிரமும், 3 வது இடத்தை பிடித்த திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி அணிக்கு ரொக்கப்பணம் ரூ.7500/ ம், 4 வது இடத்தை பிடித்த தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அணிக்கு ரொக்கப்பணம் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டன
ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி . லாசரஸ் தலைமையில் இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வக்குமார், அர்ஜுனா விருது பெற்ற வீரர் மணத்தி கணேசன், விளையாட்டு துறை ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் , பேராசிரியர் சாம்சன் மற்றும் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.