ஸ்ரீவைகுண்டம் அருகே கெட்டியம்மாள்புரத்தில் காதல் விவகாரத்தில் பிளஸ் 1 மாணவனை சராமாரியாக அரிவாளால் வெட்டிய 3 இளம் சிறார்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே அரியநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த 16 மாணவன் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் தினசரி பஸ்ஸில் பாளையங்கோட்டை செல்வாராம். அப்போது அதே பஸ்ஸில் பயணம் செய்து வந்த ஒரு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தாராம்.
இந்நிலையில் அந்த மாணவன் இன்று காலை பஸ்ஸில் சென்று கொண்டிருந்தார். பஸ் கெட்டியம்மாள்புரம் அருகே வந்தபோது 3பேர் கொண்ட கும்பல் பஸ்ஸை வழிமறித்து மாணவனை பஸ்ஸிலிருந்து இறக்கி நடுரோட்டில் வைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினார்களாம். அங்கிருந்தவர்கள் தடுக்கவே 3 பேரும் அங்கிருந்து ஓடி விட்டனர். இதில் முகம், கழுத்து, கை உட்பட உடல் முழுவதும் 9க்கும் மேற்பட்ட இடங்களில் மாணவனுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சேரகுளம் போலீசார் அந்த மாணவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து 17 வயது மதிக்கத்தக்க 3 இளஞ்சீறார்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.