Wed. Aug 27th, 2025

போக்சோ வழக்கில் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த குற்றவாளிக்கு ஆயுட்கால சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றவாளிக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் ஆயுட்கால சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு 7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் ஆழ்வார்திருநகரி பகுதியை சேர்ந்த பால்ராஜ் மகன் முருகன் (36) என்பவரை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் இன்று குற்றவாளியான முருகனுக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் ஆயுட்கால சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார் .

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லெட்சுமிபிரபா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் முருகலெட்சுமி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.

Related Post