Mon. Jun 30th, 2025

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சான்றிதழ்களில் மதிப்பெண் வழங்குவதில் முறைகேடு செய்த முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக சான்றிதழ்களில் மதிப்பெண் வழங்குவதில் முறைகேடு நடைபெற்று வந்துள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆறுமுகம் துனைவேந்தர் பொறுப்பு ஏற்ற சில மாதங்களில் புகார்கள் வந்ததை தொடர்ந்து, துறை ரீதியான நடவெடிக்கை ஜூலை 2022ஆம் ஆண்டு விசாரணைக்கு உத்தரவிட்டார். பணம் பெற்றுக் கொண்டு மாணவர்களுக்கு மதிப்பெண்களை மாற்றி அச்சடித்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டு, ஒன்றரை ஆண்டுகளாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்தது. அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் தலைமையில், அண்ணா பல்கலைக்கழக முன்னால் தேர்வு கட்டுப்பட்டு அதிகாரி மற்றும் தமிழ்நாடு பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் விசாரணை நடத்தினர். இவர்கள் அளித்த விசாரணை அறிக்கை ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முறைகேடுகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. பணம் கொடுத்து மதிப்பெண் பெற்ற மாணவர் உள்பட பல்கலைக்கழத்தைச் சேர்ந்த மற்றும் வெளிநபர்களையும் சேர்த்து 12 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் அளித்த புகாரின்பேரில் மே 2023 வேப்பேரியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டு, ஆகஸ்ட் 2024 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மணிவண்ணன், தேர்வு துணை கட்டுப்பாட்டு அலுவலர் திருமால்ராஜா, புரோகிராமர் குணசேகரன், உதவி பதிவாளர் மீனாட்சி, எழிலன், சிவக்குமார், நரேஷ்குமார், ரவி, வனிதா, பபிதா சரவணன், வெங்கடேசன் மற்றும் பணம் வழங்கிய மாணவர் அப்பாதுரை உள்ளிட்டோர் மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 17B சார்ஜ் இருவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் திருமால்ராஜா, எழிலன், மீனாட்சி மற்றும் குணசேகரன் ஆகியோர் சஸ்பெண்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெற்றனர். இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியடிப்பட்டிருந்த நிலையில் நேரமின்மை காரணத்தினால் வழக்கு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முறைகேட்டில் பிடிபட்டவர்கள் வழக்கில் இருந்து தப்பிக்கவும், விசாரணையை தாமதப்படுத்தவும் அரசியல் ரீதியில் தொடர்புகொண்டு பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக பரவலாக பேசப்படுகின்றது. இந்த முறைகேடு பல ஆண்டுகளாக நடந்து வருவதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தற்காலிகமாக பணியாற்றிய முரளி, ஆமோஸ், வெங்கடேசன் ஆகியோரை விசாரணை வளையத்தில் கொண்டுவந்தால் மேலும் பல திடுக்கிடும் முறைகேடுகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. முறைகேடு தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும் விசாரணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Related Post